×

ஈரோடு மாநகராட்சி ஒப்பந்த பணியாளர்கள் போராட்டம் தற்காலிக வாபஸ்!

 

ஈரோடு மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 4 நாட்களாக மேற்கொண்டு வந்த வேலைநிறுத்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது. 

ஈரோடு மாநகராட்சி பகுதியில் பணியாற்றும் 1,800-க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் அவுட் சோர்சிங் முறையில் தனியாரிடம் ஒப்படைக்கும் அரசாணையை கண்டித்து, கடந்த 31ஆம் தேதி முதல் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மேலும், மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். போராட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பங்கேற்றதால், மாநகராட்சி பகுதியில் குப்பைகள் மலை போல் தேங்கியது. நேற்று முன்தினம் 4-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த பணியாளர்கள், மாநகராட்சி அலுவலக வளாகத்திலேயே உணவு சமைத்து சாப்பிட்டனர். தூய்மை பணியாளர்கள் போராட்டம் காரணமாக கடந்த 4 நாட்களாக ஈரோடு மாநகராட்சி பகுதியில் குப்பைகள் அள்ளப்படாததால், சுமார் 280 டன்  குப்பைகள் தேங்கி கிடந்தன.

இந்த நிலையில், வியாழக்கிழமை மாலை மாநகராட்சி அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்தப் பணியாளர்களை அமைச்சர் முத்துசாமி நேரடியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, தமிழக அரசின் நகராட்சிகள் நிர்வாகம் வெளியிட்டுள்ள அரசாணை அமல்படுத்த கால அவகாசம் உள்ளதால், அதற்குள் சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடம் இந்த விவகாரத்தில் உரிய தீர்வு காணப்படும் என்றும், பொது மக்களின் நலன் கருதி போராட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்றும் கூறினார். மேலும், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட நாட்களுக்கு சம்பளம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் முத்துசாமி உறுதி அளித்தார்.
 
இந்த நிலையில், நேற்று காலை ஒப்பந்த பணியாளர்கள், தங்களுக்குள் கலந்து ஆலோசித்து அமைச்சரின் வேண்டுகோளை ஏற்று வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். இதை அடுத்து, நேற்று காலை முதல் ஒப்பந்த பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் வேலைக்கு சென்றனர். ஈரோடு மாநகராட்சி பகுதியில் உள்ள 60 வார்டுகளிலும் நேற்று தூய்மை பணியாளர்கள் பணிக்குச் சென்று தேங்கிய குப்பைகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர்.