தலைவாசல் அருகே காதல் தோல்வியால் பொறியியல் மாணவர் தற்கொலை!
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே காதல் தோல்வியால் பொறியியல் மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள காமாக்காபாளையம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் நல்லதம்பி. இவர் அஞ்சல் அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் நந்த அழகன் (20). இவர் சேலம் மின்னாம்பள்ளியில் உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் 3ஆம் ஆண்டு படித்து வந்தார். அவரும், அதே கல்லூரியில் படிக்கும் கள்ளக்குறிச்சியை சேர்ந்த பெண்ணும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், காதல் விவகாரம் அறிந்த பெண்ணின் உறவினர்கள் அவருக்கு வேறு நபருடன் திருமண ஏற்பாடு செய்துள்ளனர். இதனால் அந்த பெண் வீட்டில் பார்த்துள்ள மாப்பிள்ளையை திருமணம் செய்துகொள்ளப் போவதாக நந்த அழகனின் நண்பர்களிடம் தெரிவித்துள்ளர். இதனால் அதிர்ச்சியடைந்த நந்த அழகன் நேற்றிரவு நீண்ட நேரம் அந்த பெண்ணுடன் செல்போனில் பேசியுள்ளார். அப்போது, தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு அவர் கேட்டபோது அந்த பெண் மறுத்துவிட்டார்.
இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த நந்த அழகன் விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை குடும்பத்தினர் மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவலின் பேரில் தலைவாசல் போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.