×

ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் பொறியாளர் தூக்கிட்டு தற்கொலை... தூத்துக்குடி அருகே சோகம்!

 

தூத்துக்குடி அருகே ஆன்லைன் ரம்மியில் ரூ.3.5 லட்சம் பணத்தை இழந்ததால் பொறியாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி அடுத்த தெய்வசெயல்புரம் அருகே உள்ள ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆவுடையப்பன். இவரது மகன் பாலன்(30). பொறியாளரான இவர், தனியார் ஷிப்பிங் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், பாலன் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட்டு வந்துள்ளார். இதில் அவர் ரூ. 3 லட்சம் வரை பணத்தை இழந்துள்ளார். இந்த நிலையில், அவரது தந்தை ஆவுடையப்பன் வங்கியில் கட்டுவதற்காக கொடுத்த ரூ.50 ஆயிரத்தையும், அவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் இழந்துள்ளார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த பாலன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தட்டாப்பாறை போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்வம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.