×

தென்காசி அருகே ஓட்டுநர் கல்லால் தாக்கி படுகொலை - நண்பர் வெறிச்செயல்!

 

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே கஞ்சா போதையில் ஏற்பட்ட தகராறில் ஓட்டுநரை கல்லால் தாக்கி கொன்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே மேலபொய்கை பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி (34). ஓட்டுநர். அதே பகுதியை சேர்ந்தவர் செல்வக்குமார் (23). நண்பர்களான இருவரும் ஒன்றாக மது அருந்தியும், கஞ்சா புகைத்தும் வந்துள்ளனர். இந்த நிலையில், நேற்று இரவு  அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே இருவரும் கஞ்சா புகைத்துள்ளனர். அப்போது, அவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரமடைந்த செல்வகுமார், அருகில் கிடந்த கற்களை எடுத்து கருப்பசாமியை தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனை அடுத்து, செல்வகுமார் அங்கிருந்து தப்பியோடினார். கருப்பசாமி கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்ட கிராமத்தினர் இது குறித்து சேர்ந்தமரம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கொலையான கருப்பசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, கொலையாளி செல்வகுமாரை கைது செய்தனர். தொடர்ந்து, அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.