×

மேட்டூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் ஓட்டுநர் படுகொலை!

 

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே ஓட்டுநர் முகத்தை சிதைத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகேயுள்ள பாலவாடி கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மகன் பொன். குமார் (35) . இவர் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், பொன்.குமாருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்ற நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இதனால் கடந்த 5 ஆண்டுகளாக பொன்.குமார் தனியே வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், இன்று காலை பொன்.குமார் தனது வீட்டில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சிக்குள்ளான உறவினர்கள், கொளத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.  அதன் பேரில், மேட்டூர் டிஎஸ்பி விஜயகுமார், மற்றும் கொளத்தூர் காவல் ஆய்வாளர் சுப்புரெத்தினம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பொன்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக  மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தன.

மேலும், இந்த கொலை சம்பவம் குறித்து பொன்குமாரின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கொளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் கொலையான பொன். குமாருக்கு பல பெண்களுடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது தெரிய வந்தது. இதனால் அவர் கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டிருக்கலம் என கருதும் போலீசார், தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.