×

நாட்றம்பள்ளி அருக பிக்கப் வாகனம் மீது கூரியர் லாரி மோதல் - இருவர் பலி!

 

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே ஆடுகளை ஏற்றிச்சென்ற பிக்கப் வாகனம் மீது கூரியர் லாரி மோதிய விபத்தில் சிறுவன் உள்பட இருவர் உயிரிழந்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே உள்ள புதுப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் ஹக்கீம். ஆட்டு வியாபாரி. இவர் இன்று அதிகாலை  5 மணி அளவில் கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளியில் நடைபெறும் ஆட்டுச்சந்தைக்கு பிக்கப் வாகனத்தில் ஆடுகளை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார். அவருடன், அவரது தம்பி ஷாருக்கான்(28), அதே பகுதியை சேர்ந்த பாபு, அவரது மகன் அப்துல் சலாம்(9) ஆகியோரும் சென்றனர். பிக்கப் வாகனத்தை சஞ்சீவ் என்பவர் ஓட்டிச் சென்றார். அந்த வாகனம் பையனப்பள்ளி கூட்டுரோடு வழியாக தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.

அப்போது, சென்னையில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி வந்த கூரியர் லாரி எதிர்பாராத விதமாக, ஆடுகளை ஏற்றிச்சென்ற வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் பிக்கப் வேன் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் ஷாருக்கான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அப்துல் சலாம் உள்ளிட்ட 4 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் 4 பேரையும் அந்த பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே அப்துல் சலாம் உயிரிழந்தார்.

மற்ற 3 பேருக்கும் அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாட்டறம்பள்ளி போலீசார், பலியான இருவரது உடல்களையும் மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து,  விசாரித்து வருகின்றனர்.