×

ஈரோடு புதுமை காலனியில் ஆக்கிரமிப்புகளை அற்றிய மாநகராட்சி அதிகாரிகள்!

 

ஈரோடு மரப்பாலம் புதுமை காலனி பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக அமைக்கப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக அகற்றினர்.

ஈரோடு மரப்பாலம் புதுமை காலனி பகுதியில் ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தும் விதமாக ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டு உள்ளதாக மாநகராட்சிக்கு தொடர் புகார்கள் வந்தன. அதேபோல், குடியிருப்பு பகுதிக்கு முன்பு சிலர் கூரை அமைத்து கடைகள் அமைத்து உள்ளதாகவும், மேலும் சிலர் செட்டுகள் அமைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் போக்குவரத்திற்கு சிரமம் ஏற்படுவதாக புகார் தெரிவித்து வந்தனர்.

இதை அடுத்து, நேற்று ஈரோடு மாநகராட்சி அதிகாரிகள் புதுமை காலனி பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். ஜே.சி.பி. எந்திரம் மூலம் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகளை அகற்றிய மாநகராட்சி ஊழியர்கள், அங்கிருந்த பொருட்களை வேனில் ஏற்றிச்சென்றனர். ஆக்கிரமிப்பு அகற்றத்தையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.