×

அணைக்கட்டு அருகே மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலி!

 

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே சாலையில் அறுந்துகிடந்த மின்கம்பியை மிதித்த கட்டிட தொழிலாளி மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே உள்ள ஊணை வாணியம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் பழனி. கட்டிட தொழிலாளி. இவர் பிச்சாநத்தம் பகுதியில் கட்டிட பணியில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில், நேற்று காலை வீட்டில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் வேலைக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தார். அப்போது, சாலையின் மேலே சென்ற உயர் அழுத்த மின்கம்பி ஒன்று அறுந்து கீழே கிடந்துள்ளது. இதனை கவனிக்காத பழனி எதிர்பாராத விதமாக மின்சார ஒயரை மிதித்துள்ளார்.

இதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த மின்வாரிய ஊழியர்கள், உடனடியாக மின்இணைப்பை துண்டித்தனர். இதனை அடுத்து, அணைக்கட்டு போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.