×

கோவையில் கார் மோதி 3ஆம் வகுப்பு மாணவர் பலி!

 

கோவை போத்தனூரில் சைக்கிளில் சென்ற 3 ஆம் வகுப்பு மாணவர் மீது கார் மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை போத்தனூர் வண்ணாரப்பேட்டை வீதியை சேர்ந்தவர் பாஷித். இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக உள்ளார். இவரது மகன் ரைபுதீன்(8). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 3ஆம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறுவன் ரைபுதீன் வெளியே சென்றுவிட்டு சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தான். அப்போது, அவரது வீட்டின் அருகே வசிக்கும் செய்யது முகமது பெரோஸ் (34) என்பவர் தான் புதிதாக வாங்கிய காரை வீட்டின் அருகே நிறுத்துவதற்காக பின்புறமாக நகர்த்த முயன்றார். அப்போது தவறுதலாக முன் பக்க கியரை போட்டதால் கார் முன்புறமாக சென்று சைக்கிளில் நின்ற சிறுவன் ரைபுதீன் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த சிறுவனை பெற்றோர் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சிறுவனின் தந்தை பாஷித் அளித்த புகாரின் அடிப்படையில், கோவை மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், விபத்தை ஏற்படுத்திய செய்யது முகமது பெரோஸ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகினறனர். இதனிடையே விபத்து குறித்த பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.