×

பிள்ளைகள், கணவர் இறந்ததால் விரக்தியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை... ஆம்பூரில் சோகம்!

 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் 2 குழந்தைகள், கணவர் உயிரிழந்த வேதனையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் லோகேஸ்வரன். சென்னையில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி மீனாட்சி. இவர்களுக்கு ஜஸ்வந்த் (8). ஹரிபிரிதா (6) என 2 பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில், கடந்தாண்டு, விநாயகர் சதுர்த்தி விடுமுறைக்காக மீனாட்சி, கணவர் மற்றும் குழந்தைகளுடன், தனது சொந்த ஊரான ஆம்பூர் அருகே உள்ள கடாம்பூர் கிராமத்துக்கு சென்றிருந்தார். தொடர்ந்து, கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி கைலாசகிரி மலைக்கு குழந்தைகளுடன் சென்றிருந்த லோகேஷ்வரன், சுவாமி தரிசனத்துக்கு பின் கோவில் குளத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்தார். 

அப்போது, குழந்தைகள் ஜஸ்வந்த், ஹரிப்ரியா ஆகியோர் குளத்தில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர். இதனை அடுத்து, போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் இருவரது உடல்களையும் மீட்டு, ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.  குழந்தைகள் உயிரிழந்ததால் வாழ்வில் விரக்தியடைந்த லோகேஷ்வரன், மீனாட்சி தம்பதியினர் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து, மறுநாள் ஆம்பூர் ரயில் நிலையத்தில் வைத்து குளிர்பானத்தில் விஷம் கலந்து குடிக்க திட்டமிட்டனர். அதன்படி முதலில் லோகேஷ்வரன் விஷ குளிர்பானத்தை குடித்தார். பின்னர், மீனாட்சி குடிக்க முயன்றபோது விஷத்தை தட்டிவிட்ட லேகேஷ், தன்னையும், குழந்தைகளையும் அடக்கம் செய்து விட்டு, அதன் பின் நீ ஏதாவது செய்து கொள் எனக் கூறினார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மீனாட்சி அலறி துடிக்கவே, அருகில் இருந்தவர்கள் லோகேஸ்வரனை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி லோகேஷ்வரன் பரிதாபமாக உயிரிந்தார்.  2 பிள்ளைகளையும், கணவரை அடுத்தடுத்து பறிகொடுத்த வேதனையில் இருந்த மீனாட்சி கடந்த 6 மாதமாக கடாம்பூரில் உள்ள தனது தாய் சுமதி வீட்டில் வசித்து வந்தார். இதனிடையே வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

தகவல் அறிந்த உமராபாத் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று மீனாட்சியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரு குழந்தைகளும், கணவனும் உயிரிழந்த துக்கத்தில் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.