×

பணியில் இருந்த தலைமை காவலர் நெஞ்சுவலியால் உயிரிழப்பு... சேலம் அருகே சோகம்!

 

சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் காவல் நிலையத்தில் பணியில் இருந்த தலைமை காவலர் நெஞ்சுவலியால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள துவரகாபுரி பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ்(56). இவர் சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சித்ரா. இத்தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், நேற்று காலை வழக்கம்போல் செல்வராஜ் ஏத்தப்பூர் காவல் நிலையத்திற்கு பணிக்கு சென்றுள்ளார். அங்கு பணியில் இருந்தபோது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து செல்வராஜ் தனது சக காவலர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து, காவலர்கள் அவரை அருகில் உள்ள பெத்தநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி தலைமை காவலர் செல்வராஜ் உயிரிழந்தார். பணியின் போது காவலர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினர் மற்றும் சக போலீசார் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.