×

ஈரோடு புத்தகத் திருவிழாவை முதல்வர் காணொலி காட்சி மூலம் ஆக.5-ல் திறந்து வைக்கிறார்!

 

ஈரோடு புத்தக திருவிழாவை வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்க உள்ளதாக மக்கள் சிந்தனை பேரவை அமைப்பு தெரிவித்துள்ளது.

ஈரோட்டில் இதுதொடர்பாக நேற்று பேரவை மாநில தலைவரும், வழக்கறிஞருமான ஸ்டாலின் குணசேகரன் கூறியதாவது, மக்கள் சிந்தனை பேரவையின் 24-வது ஆண்டில் நடத்தும் இந்த கண்காட்சியை முதல்வர் துவக்கி வைக்க வருவதாக இருந்தது. சில காரணங்களால் அவர் வர இயலவில்லை. எனவே காணொலி காட்சி மூலம் அவர் புத்தகத் திருவிழாவை துவக்கி வைக்கிறார். அமைச்சர் முத்துசாமி உட்பட பல உயர் அரசு அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். வழக்கம்போல் எந்த நுழைவுக் கட்டணமும் இல்லை. ஆகஸ்ட் 5 முதல் 16 வரை ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி திடலில் புத்தகத் திருவிழா 230-க்கும் மேற்பட்ட அரங்குகள் உடன் நடைபெறுகிறது. ஒவ்வொரு நாளும் புகழ்பெற்ற தமிழ் அறிஞர்கள், கலைஞர்கள், இசையமைப்பாளர்கள் மாலை நேர நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். 

9ஆம் தேதி 10 வெளிநாடுகளைச் சேர்ந்த தமிழறிஞர்கள் கலந்துகொள்ளும் சிறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. 8ஆம் தேதி இளம் அறிவியல் கண்டுபிடிப்பாளர் ஒருவருக்கு ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசுடன் கூடிய ஜி.டி. நாயுடு விருது வழங்கப்படுகிறது. உலக தமிழ் பல்கலைக்கழகம் தமிழராய்ச்சி நிறுவனம், தமிழ்நாடு பாடநூல் கழகம் மற்றும் மத்திய - மாநில புத்தக பதிப்பாளர்கள், இந்திய மற்றும் பன்னாட்டு பதிப்பாளர்கள்  விழாவில் பங்கேற்கின்றனர். 230 அரங்கில் 70 அரங்குகள் ஆங்கிலப் புத்தகங்களை கொண்டதாகவும், சுமார் 30% பள்ளி கல்லூரி மாணவ - மாணவிகளுக்கும், போட்டித் தேர்வுக்கு தயாராகும் இளைஞர்களுக்கும்  அமைக்கப்பட உள்ளன. 

ஒவ்வொரு நாளும் காலை 10 மணி முதல் 1 மணி வரை எழுத்தாளர்களின் புதிய படைப்புகள் இவ்விழாவில் வெளியிடப்படும். புதிய எழுத்தாளர்களின் புத்தகங்கள் பதிப்பிக்க மக்கள் சிந்தனைப் பேரவை உதவும். பொதுமக்களுக்கு 10 சதவீமும், பள்ளி கல்லூரிகளுக்கு 10 முதல் 50 சதம் வரை விலையில் தள்ளுபடி வழங்க பதிப்பாளர்கள் முன்வந்து உள்ளனர். வீடுகள் மற்றும் பள்ளி கல்லூரிகளில் சிறிய நூலகம் அமைக்க சலுகை விலையில் புக் க்ஷெல்ப் வழங்கப்படும். ரூ.250-க்கும் மேற்பட்ட விலையில் புத்தகங்கள் வாங்கும் மாணவ- மாணவிகளுக்கு புத்தக ஆர்வலர்கள் சான்றிதழ் வழங்கப்படும். புத்தகம் வாங்கும் பழக்கம் மற்றும் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க மாணவ - மாணவிகளுக்கு சலுகை விலையில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட உண்டியல்கள் வழங்க திட்டமிட்டுள்ளோம். 

சாலமன் பாப்பையா, பாலசுந்தரம், சங்கர சுப்பிரமணியன், திரைப்படக் கலைஞர் லெனின்,  சுகிசிவம், ஜேம்ஸ் வசந்தகுமார், தமிழருவிமணியன், நடிகர் சிவக்குமார் போன்ற அறிஞர்கள் விழாவில் தினசரி நடைபெறும் இலக்கிய சொற்பொழிவில் கலந்து கொள்கின்றனர். சுதந்திர திருநாளை முன்னிட்டு 15ஆம் தேதி வேலுநாச்சியார் நாடகமும், 16ஆம் தேதி சுதந்திர போராட்ட வீரர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி லட்சுமிகாந்தன் பாரதிக்கு பாராட்டு விழாவும் நடைபெறுகிறது. அரசு கல்லூரி என்பதால் பேரவை சார்பில் கல்லூரிக்கு ரூ. 1 லட்சம் நன்கொடை வழங்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். பேரவைச் செயலர் அன்பரசு, பொருளாளர் அன்பழகன் ஆகியோர் உடனிருந்தனர்.