×

பூ வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து 23 பவுன் நகை, ரூ.2.5 லட்சம் பணம் திருட்டு!

 

தூத்துக்குடி டூவிபுரத்தில் பூ வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து 23 பவுன் நகை மற்றும் ரூ. 2.5 லட்சம் ரொக்கப்பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி டூவிபுரம் 5-வது தெருவை சேர்ந்தவர் சித்திரைவேல்(51). இவர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் பூக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி கல்பனா. இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை சித்திரை வேல் தனது வீட்டை பூட்டிவிட்டு, மனைவியுடன் பூக்கடைக்கு புறப்பட்டு சென்றுள்ளார். வியாபாரம் முடிந்து இரவு திரும்பி வந்தபோது வீட்டின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு திறந்த நிலையில் கிடந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த தம்பதியினர் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளனர். 

அப்போது, மர்மநபர்கள் பீரோவை உடைத்து, அதன் உள்ளே வைத்திருந்த 23 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.2.5 லட்சம் ரொக்கப்பணம் ஆகியவற்றை திருடிச்சென்றது தெரியவந்தது. இது குறித்து சித்திரைவேல் தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், இந்த கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பூ வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.