×

தருமபுரி நகரில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட சிறுவன் கைது... 7 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்!

 

தருமபுரி நகர் பகுதியில் தொடர் இருசக்கர வாகன  திருட்டில் ஈடுபட்ட நபரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 7 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

தருமபுரி அரசு மருத்துவமனை, பேருந்து நிலையம் பகுதியில் உள்ள கடைவீதிகள் உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து திருடப்பட்டு வந்தன. இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் தருமபுரி டவுன் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, இருசக்கர வாகனங்களை திருடிய நபர்கள் குறித்து தீவிரமாக விசாரித்து வந்தனர்.

மேலும், வாகனங்கள் திருடப்பட்ட பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி தீவிரமாக ஆய்வு செய்தனர். அதில், தருமபுரி அருகே உள்ள அரியகுளம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் வாகன திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து, நேற்று டவுன் போலீசார் 17 வயது சிறுவனை கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து திருடு போன 7 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.