×

தென்காசி அருகே சாலை விபத்தில் வங்கி ஊழியர் பலி... திருமணமான ஒரு வாரத்தில் சோகம்!

 

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே திருமணமான ஒரு வாரத்தில் வங்கி ஊழியர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள ஆனைகுளம் கிராமத்தை சேர்ந்தவர் பவுன்ராஜ் மகன் கலையரசன் (27). இவர் கடையநல்லூர் பகுதியில் உள்ள வங்கியில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு, கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், நேற்று காலை கலையரசன் தனது இருசக்கர வாகனத்தில் பணிக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனத்துடன் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது. இதில் கலையரசன் பலத்த காயமடைந்தார்.

மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த சாம்பவர் வடகரை பகுதியை சேர்ந்த மூர்த்தி என்பவர் லேசான காயங்களுடன் உயர் தப்பினார். காயமடைந்த கலையரசனை அருகில் உள்ள பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் இன்று காலை கலையரசன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து சுரண்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.