×

நடத்தையில் சந்தேகம்... காதல் மனைவியை கத்தியால் குத்திக்கொன்ற ஆட்டோ ஓட்டுநர்!

 

கோவை சுந்தராபுரத்தில் நடத்தையில் சந்தேகத்தால் காதல் மனைவியை கத்தியால் குத்திக்கொன்ற ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.

கோவை போத்தனூர் காமராஜ் நகரை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் நாகார்ஜுன்(30). ஆட்டோ ஓட்டுநர். இவரும், அதே பகுதியை சேர்ந்த சர்மிளா(25) என்பவரும் கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில், பெற்றோர் எதிர்ப்பையும் மீறி கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதனை தொடர்ந்து, சுந்தராபுரம் காந்தி நகரில் வாடைக்கு வீடு எடுத்து இருவரும் வசித்து வந்தனர்.இந்த நிலையில், சர்மிளா செல்போனில் அடிக்கடி ஒரு நபரிடம் பேசி வந்ததாக கூறப்படுகிறது.

இதனால், அவரது நடத்தையில் சந்தேகமடைந்த நாகார்ஜுன், சர்மிளாவிடம் இதுதொடர்பாக அடிக்கடி தகராறு  செய்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று பிற்பகல் வீட்டிற்கு சென்ற நாகார்ஜுன், இதுதொடர்பாக சர்மிளாவிடம் மீண்டும் தகராறு செய்துள்ளார். அப்போது, அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த நாகார்ஜுன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து, சர்மிளாவை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இதனை தொடர்ந்து, நாகார்ஜுன் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்ற நிலையில், இரவு 8 மணியளவில் நண்பருடன் மதுஅருந்தியபோது, மனைவியை கொலை செய்த தகவலை தெரிவித்துள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சிக்குள்ளான அவரது நண்பர்கள், போத்தனூர் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொலையான சர்மிளாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், தலைமறைவாக இருந்த நாகார்ஜுனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.