×

மிளகாய் பொடியை தூவி ராணுவ வீரர் கொலை... மனைவி வெறிச்செயல்!

 

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே ராணுவ வீரரின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி, அவரை கத்தியால் குத்திக்கொன்ற மனைவியை போலீசார் தேடி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள பண்ணந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் நரேஷ்குமார்(42). இவர் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சசிகலா. இத்தம்பதிக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில், நேற்று விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்த நரேஷ்குமார், மதுபோதையில் தாய் வீட்டிலிருந்த சசிகலாவை குடும்பம் நடத்த அழைத்துள்ளார்.

 அப்போது, அவர் வர மறுத்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில், நரேஷ்குமார் சசிகலாவை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த சசிகலா, வீட்டிலிருந்த மிளகாய் பொடியை எடுத்து  நரேஷ்குமார் முகத்தில் தூவி, அவரை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதில், பலத்த காயமடைந்த நரேஷ்குமாரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று அதிகாலை நரேஷ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பாரூர் போலீசார், வழக்குப்பதிவு தப்பியோடிய சசிகலாவை தீவிரமாக தேடி வருகின்றனர். குடும்ப தரகாறில் மனைவியே கணவரை குத்திக் கொன்ற சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.