×

பெட்ரோல் நிரப்பியதற்கு பணம் கேட்டதால் ஆத்திரம்... பங்க் ஊழியரை சரமாரியாக தாக்கிய இளைஞர்!

 

விழுப்புரத்தில் வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பிக்கொண்டு, பணம் கேட்ட பங்க் ஊழியரை இளைஞர் ஒருவர் சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

விழுப்புரம் அருகே முண்டியம்பாக்கம் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. இந்த பெட்ரோல் பங்கில் விக்கிரவாண்டியை சேர்ந்த ராகுல் (19) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை இரவு 7 மணியளவில் முண்டியம்பாக்கம் பகுதியை சேர்ந்த விஜய் (23) என்பவ ர், குறிப்பிட்ட பெட்ரோல் பங்கில் தனது இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போட்டுள்ளார். அதற்காக பங்க் ஊழியர் ராகுல் பணம்  கேட்டுள்ளார்.

அப்போது, ஆத்திரமடைந்த விஜய், ராகுலை சரமாரியாக தாக்கிவிட்டு, பணம் கொடுக்காமல் தனது இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு சென்றார். இந்த சம்பவம் குறித்து ராகுல் விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, பங்க் ஊழியரை இளைஞர் தாக்கிய சிசிடிவி காட்சிகள் சமுக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.