×

தனியார் பேருந்தில் இருந்து தவறி விழுந்து மூதாட்டி பலி... குன்னம் அருகே சோகம்!

 

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே தனியார் பேருந்தில் இருந்து தவறி விழுந்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா அகரம் சீகூர் பகுதியை துரைசாமி. இவரது மனைவி கலியம்மாள்(75). இவர் நேற்று பெரம்பலூர் மாவட்டம் அத்தியூர் பகுதியில் நடைபெற்ற உறவினரின் துக்க நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார். பின்னர் மாலை ஊருக்கு செல்வதற்காக திருச்சியில் இருந்து கடலூர் மாவட்டம் திட்டக்குடி நோக்கி சென்ற தனியார் பேருந்தில் ஏறினார். அகரம் சீகூர் பேருந்து நிலையம் வந்தபோது, பேருந்தில் இருந்து கலியம்மாள் இறங்க முயன்றார். அப்போது, எதிர்பாராத விதமாக அவர் பேருந்தில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், கிராமத்தினர் அவரை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி கலியம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனியார் பேருந்து ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனியார் பேருந்தில் இருந்த தவறி விழுந்து மூதாட்டி பலியான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.