×

காரிமங்கலம் அருகே பொறியியல் மாணவர் கிணற்றில் குதித்து தற்கொலை!

 

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே பொறியியல் மாணவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள வெள்ளையன் கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம். விவசாயி. இவரது மகன் சஞ்சய் (19). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில், சஞ்சய்க்கு சரிவர படிப்பு வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் மனவேதனையில் இருந்து வந்துள்ளார். அவருக்கு பெற்றோர் ஆறுதல் கூறி படிப்பில் கவனம் செலுத்தும்படி அறிவுறுத்தி வந்துள்ளனர். இந்த நிலையில், வாழ்க்கையில் விரக்தியடைந்த சஞ்சய் கிராமத்தில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். சஞ்சய் கிணற்றில் சடலமாக கிடப்பதை கண்ட கிராம மக்கள் இதுகுறித்து காரிமங்கலம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவர் சஞ்சயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து சஞ்சயின் தந்தை செல்வம் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். படிப்பு சரியாக வராததால் பொறியியல் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.