×

உடன்குடியில் காரில் கடத்திய ரூ.11 கோடி மதிப்பிலான அம்பர்கிரீஸ் பறிமுதல் - 3 பேர் கைது!

 

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் காரில் கடத்திய ரூ.11 கோடி மதிப்பிலான அம்பர்கிரீஸை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக 3 பேரை கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம்  உடன்குடி வழியாக விலை உயர்ந்த பொருட்கள் கடத்திவரப்படுவதாக குலசேகரன்பட்டினம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், போலீசார் உடன்குடி புதுமனை சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த காரை சந்தேகத்தின் பேரில் போலீசார் மறித்து சோதனையிட்டனர். அப்போது, காரில் இருந்த 3 பிளாஸ்டிக் பைகளில் அரசால் தடை செய்யப்பட்ட அம்பர் கிரீஸ் எனப்படும் திமிங்கல எச்சம் கடத்திச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதனை அடுத்து அவர்களிடம் இருந்து 11 கிலோ 125 கிராம் எடையிலான ஆம்பர்ம்கிரீஸ் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்த அம்பர்கிரீசின் மதிப்பு ரூ.11 கோடி ஆகும். இவற்றை கடத்தியது தொடர்பாக நெல்லை மாவட்டம் இருக்கன்துறையை சேர்ந்த பெனிஸ்டோ(44), பெருமணலை சேர்ந்த அருள் ஆல்வின்(40) மற்றும் செட்டிகுளம் பகுதியை சேர்ந்த வேணுகோபால் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.  தொடர்ந்து, பிடிபட்ட 3 பேர் மற்றும் அம்பர்கிரீஸ் திருச்செந்தூர் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.