×

சுங்கச்சாவடி பணியிலிருந்து நீக்கியதால் இளைஞர் தீக்குளித்து தற்கொலை... பெரம்பலூர் அருகே சோகம்!

 

பெரம்பலூர் அருகே சுங்கச்சாவடி நிர்வாகம் பணியில் இருந்து நீக்கியதால் விரக்தியில் இளைஞர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.  

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள சு.ஆடுதுறை பகுதியை சேர்ந்தவர் கோபால் (44). இவர் திருமாந்துறை பகுதியில் உள்ள தனியார் சுங்கச் சாவடியில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வந்தார். இந்த சுங்கச்சாவடியில் சமீபத்தில் 28 பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதனால் அவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் கோபால் பணியில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நேற்று அதிகாலை சுங்கச்சாவடி அலுவலகத்திற்கு அவர் விசாரிக்க சென்றுள்ளார். அப்போது, அவரை பணிக்கு வர வேண்டாம் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதனால் மனமுடைந்த கோபால், சு.ஆடுதுறை கிராமம் வெள்ளாற்றங்கரை பகுதியில் உள்ள கொட்டகையில் உடலில் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டார் இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த மங்கலமேடு போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.