×

திருப்பூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞர் கைது!

 

திருப்பூரில் காதலை ஏற்க மறுத்த 8ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

திருப்பூர் கோல்டன் நகர் பகுதியை சேர்ந்தவர் தாமோதரன். இவர் தனியார் பின்னலாடை நிறுவனத்தில் டெய்லராக பணிபுரிந்து வருகிறார். இவர், அதே பகுதியை சேந்த 8ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவியை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால் மாணவி காதலை ஏற்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், அவர் மாணவிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனை அறிந்த மாணவியின் பெற்றோர், தாமோதரனை கண்டித்து உள்ளனர். இதில் ஆத்திரமடைந்த தாமோதரன், சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி, தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர், தாமோதரன் மீது திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில், போலீசார் தாமோதரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். தொடர்ந்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.