×

கைக்குழந்தையுடன் இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை... செஞ்சி அருகே சோகம்!

 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே கைக்குழந்தையுடன் இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள மேல்எடையாளம் கடக்கால்தோப்பு பகுதியை சேர்ந்தவர் அப்துல்லா. இவரது மனைவி பெர்த்தோஸ் (22). கணவன் - மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் பெர்த்தோஸ் மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில், வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் நேற்று காலை தனது கைக்குழந்தையுடன் வீட்டின் அருகில் கிணற்றில் குதித்தார். இதில் தாயும், குழந்தையும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதனிடையே கிணற்றில் இருவரது உடல்களும் மிதப்பதை கண்ட கிராமத்தினர், இது குறித்து செஞ்சி போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து பெர்த்தோஸின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்ப தகரறில் கைக்குழந்தையுடன் இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.