×

கோவையில் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞரால் பரபரப்பு!

 

கோவை கணபதி பகுதியில் மதுபோதையில் செல்போன் கோபுரம் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

கோவை கணபதி காமாட்சி அம்மன் கோவில் பகுதியில் தனியார் செல்போன் டவர் அமைந்துள்ளது. நேற்று பிற்பகல் போதை இளைஞர் ஒருவர் திடீரென செல்போன் கோபுரத்தின் மீது ஏறினார். கோபுரத்தின் உச்சிக்கு சென்ற அந்த நபர் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறி மிரட்டல் விடுத்தார். அத்துடன், டவரில் இருந்த கம்பிகளையும், போல்ட்களையும் கலட்டி கீழே வீசினார். இதனை கண்ட அங்கு திரண்ட அந்த பகுதி பொதுமக்கள், இது குறித்து தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர், அந்த போதை இளைஞரை சமாதானம் பேசி கீழே இறக்க முயற்சி மேற்கொண்டு வந்தனர்.

இதனிடையே போலீசாரின் விசாரணையில் அந்த நபர் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பிரபாகரன் என்பதும், அவர் கோவையில் தங்கி கூலி வேலை செய்து வருவதும் தெரியவந்தது. மேலும், மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுப்பதும் தெரியவந்தது. இதனை அடுத்து, சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக தற்கொலை மிரட்டுல் விடுத்து வந்த அந்த இளைஞரை, தீயணைப்புத்துறையினர்  சாமாதனப்படுத்தி கீழே இறக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.