×

பணம் தர மறுத்த பார் ஊழியரை அரிவாளால் தாக்க முயன்ற இளைஞர்... சிசிடிவி காட்சிகள் வெளியீடு!

 

கரூரில் டாஸ்மாக் பாரில் பணம் தர மறுத்த ஊழியரை, இளைஞர் ஒருவர் நீண்ட வாளுடன் தாக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

கரூர் அருகே உள்ள ஆத்தூர் பகுதியில் டாஸ்மாக் மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. அதன் அருகிலேயே மதுபான பார் செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் மாலை, பாருக்கு வந்த 3 இளைஞர்கள், அங்கு பணியில் இருந்த ஊழியர் தங்கராஜ் என்பவரிடம் பணம் கேட்டதாக கூறப்படுகிறது. அவர் பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த இளைஞர் ஒருவர், தன்னிடம் இருந்த நீண்ட் வாளை எடுத்து தங்கராஜை தாக்க முயன்றார். இதனால் அச்சமடைந்த தங்கராஜ் கடையின் உள்ளே சென்று ஒழிந்தபோது, அந்த இளைஞர் துரத்திச்சென்று தாக்க முற்பட்டார். 

இதனை கண்டு கடையில் இருந்த ஊழியர்கள் அந்த இளைஞரை தட்டிக்கேட்டபோது, அவர்களை அரிவாளை திருப்பி பிடித்த படி அவர் தாக்கினார். இதனை அடுத்து, உடன் வந்தவர்கள் அந்த இளைஞரை சமாதானம் செய்து அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து பார் ஊழியர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் கரூர் டவுன் போலிசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான இளைஞரை தேடி வருகின்றனர். இதனிடையே, இந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.