×

கோவையில் தண்ணீர் தொட்டியில் சடலமாக கிடந்த இளம்பெண் - போலீசார் விசாரணை!

 

கோவை உப்பிலிபாளையத்தில் அடிக்குமாடி குடியிருப்பில் உள்ள தண்ணீர் தொட்டியில் இளம்பெண் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

கோவை ரத்தினபுரி பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மனைவி தேவி(27). மூர்த்தி உயிரிழந்த நிலையில், தேவி கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்தார். இந்த நிலையில், நேற்று தேவி, தனது அக்கா சத்யா(33) உடன் உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள தனியார் குடியிருப்பு பகுதியில் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அன்று மாலை 5.30 மணி அளவில் பணியில் ஈடுபட்டிருந்த தேவி திடீரென மாயமாகினார்.  சத்யா பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், இரவு 7.30 மணி அளவில் தண்ணீர் தொட்டியில் தேவி சடலமாக கிடந்தார். இது குறித்து குடியிருப்புவாசிகள் அளித்த தகவலின் பேரில் தீயணைப்புத்துறையினர்  மற்றும் சிங்காநல்லுர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.