×

திண்டுக்கல் அருகே விளக்கேற்றியபோது உடையில் தீப்பற்றியதில் இளம்பெண் பலி!

 

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே விளக்கை பற்ற வைத்தபோது உடையில் தீப்பற்றியதில் இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். 

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள அதிகாரிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ். கூலி தொழிலாளி. இவரது மனைவி கவிதா (29). இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில், செல்வராஜ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டார். இதனால் கவிதா, தனது பிள்ளைகளுடன் தனியே வந்து வந்தார்.

இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை அன்று கவிதா தனது வீட்டில் இருந்த மண்ணெண்ணை விளக்கினை பற்ற வைத்துள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக அவரது சேலையில் தீப்பற்றி, மளமளவென உடல் முழுவதும் தீ பரவியது. வலி தாங்க முடியால் கவிதா அலறி துடிக்கவே, அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று அவர் மீது பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.

இந்த விபத்தில் அவர் பலத்த தீக்காயமடைந்தார். தொடர்ந்து, அவர் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று கவிதா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் சாணார்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.