×

பாரில் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் தொழிலாளி அடித்துக்கொலை... திருச்சியில் பயங்கரம்!

 

திருச்சியில் மதுபானக்கூடத்தில் ஏற்பட்ட தகராறில் வெளிநாட்டில் பணிபுரியும் தொழிலாளி அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

திருச்சி கிராபட்டி பகுதியை சேர்ந்தவர் சின்னதுரை (46). இவர் இங்கிலாந்தின் லண்டன் நகரில் உள்ள பெட்ரோல் பங்கில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். சமீபத்தில் தான் புதிதாக கட்டிய வீட்டின் கிரக பிரவேசத்திற்காக சின்னதுரை திருச்சிக்கு வந்திருந்தார். இந்த நிலையில், நேற்று டிவிஎஸ் டோல்கேட் முடுக்குப்பட்டி பகுதியில் உள்ள மதுபான கூடத்திற்கு மது அருந்துவதற்காக சின்னதுரை சென்றிருந்தார். அப்போது, அங்கு மது அருந்திக் கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த சரவணன், தர்மன், பிரசன்னா ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனை கண்ட சின்னதுரை அவர்களை சமாதானம் செய்ய முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும், மது பாட்டிலால் சின்னதுரையை சரமாரியாக தாக்கி உள்ளனர். 

இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் சின்னதுரை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.  தகவல் அறிந்த கண்டோன்மெண்ட் போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய கொலையாளிகளை தேடி வருகின்றனர்.