×

கோவை அருகே கார் மீது லாரி மோதி விபத்து - தந்தை, மகன் பலி!

 

கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் திருப்பூரை சேர்ந்த தந்தை, மகன் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள சின்னாகவுண்டன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் பண்ணாரி (55). இவர் இன்று காலை தனது மகன் கோபால் (28) உடன்,  உடுமலைக்கு காரில் சென்று கொண்டிருந்தார். கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை அருகே உள்ள சின்னாப்புதூர் பகுதியில் சென்றபோது கார் மீது எதிரே கோழி ஏற்றி வந்த லாரி அதிவேகமாக மோதி விபத்திற்கு உள்ளானது. இதில் படுகாயமடைந்த பண்ணாரி, அவரது மகன் கோபால் ஆகியோர்  சம்பவ இடத்திலேயே பரிதாமாக உயிரிழந்தனர். மேலும், லாரி ஓட்டுநர் சூலூரை சேர்ந்த அருண் பிரசாத் என்பவர் பலத்த காயமடைந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சுல்தான் பேட்டை போலீசார், அருண்பிரசாத்தை மீட்டு சிகிச்சைக்காக உடுமலையில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பலியான தந்தை,மகன் இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.