×

லால்குடி அருகே பைக் மீது டிராக்டர் மோதி விபத்து - இளைஞர் பலி!

 

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே இருசக்கர வாகனம் மீது டிராக்டர் மோதிய விபத்தில் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள ஆதிகுடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் சிவகுமார்(23).தொழிலாளி. கடந்த சில நாட்களுக்கு முன் இவரும், அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவரும் லால்குடிக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் ஆதிகுடிக்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது, இருசக்கர வாகனத்தின் மீது எதிரே வந்த டிராக்டர் மோதி விபத்திற்குள்ளானது.

இதில் சிவகுமார், சுப்பிரமணி ஆகியோர் பலத்த காயமடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக லால்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிவகுமார் நேற்று உயிரிழந்தார். சுப்பிரமணிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து புகாரின் பேரில் லால்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.