×

தஞ்சாவூர் அருகே மின்சாரம் தாக்கி தற்காலிக ஊழியர் பலி!

 

தஞ்சாவூர் அருகே மின்விளக்கு பொருத்தும் பணியின்போது மின்சாரம் தாக்கி ஒப்பந்த ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார். 

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள கள்ளக்குடி கிராமத்தை சேர்ந்தவர் மோகனசுந்தரம். இவரது மகன் அசோக்குமார்(25). இவர் திருவையாறு மின்வாரிய அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், நேற்று துளசேந்திரபுரம் கிராமத்தில் உள்ள மின்கம்பங்களில் மின் விளக்குகள் பொருத்தும் பணியில் அசோக்குமார் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக மின்கம்பத்தின் மேலே சென்ற உயர் அழுத்த மின்கம்பியின் மீது அவரது கை உரசியுள்ளது.

இதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.  தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அய்யம்பேட்டை போலீசார், அசோக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.