×

சத்தியமங்கலம் அருகே அரசுப்பேருந்தை வழிமறித்து தாக்கிய ஒற்றை யானை!

 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அரசுப்பேருந்தை ஒற்றை காட்டுயானை வழிமறித்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..

கர்நாடக மாநிலம் கொள்ளேகாலில் இருந்து 40-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசுப்பேருந்து ஒன்று ஆசனூர், சத்தியமங்கலம் வழியாக கோவை நோக்கி சென்று கொண்டிருந்தது. நேற்று மாலை கெத்தேசால் வனசாலை அருகே அரசுப்பேருந்து சென்றபோது சாலையில் திடீரென ஒற்றை காட்டுயானை வழிமறித்து நின்றது. யானையை கண்ட உடன் ஓட்டுநர் பேருந்தை பின்னோக்கி நகர்த்தி சென்றார். அப்போது, அரசுப்பேருந்தை நோக்கி ஆக்ரோஷமுடன் வந்த காட்டுயானை, பேருந்தின் முன்பகுதியை தாக்கியது. இதில் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தது.

இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் மற்றும் குழந்தைகள் அதிர்ச்சியில் கத்தி கூச்சலிட்டனர். அப்போது, சாலையில் சிறிதுநேரம் உலாவிய காட்டுயானை, பின்னர் வனப்பகுதிக்குள் புறப்பட்டு சென்றது. இதனை தொடர்ந்து, ஒட்டுநர் பேருந்தை ஒட்டிச்சென்றார். இந்த சம்பவம் குறித்த விடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.