×

பாலக்கோடு அருகே காதல் ஜோடி தற்கொலை முயற்சி... காதலி உயிரிழப்பு!

 

பாலக்கோடு அருகே பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி எலி பேஸ்ட்டை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதில், காதலி பரிதாபமாக உயிரிழந்தார்.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள கொல்லப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முனியப்பன். இவரது மகள் சினேகா(19). இவர் பாலக்கோடு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வந்தார். குளிக்காடு பகுதியை சேர்ந்த முருகன் என்பவரது மகன் தமிழரசு (18). இவர் தர்மபுரியில் உள்ள ஐ.டி.ஐ-ல் 2ஆம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரிக்கு பேருந்தில் சென்றபோது சினேகா - தமிழரசு இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது காதலாக மாறியுள்ளது. இவர்களது காதல் விவகாரம் சினேகாவின் பெற்றோருக்கு தெரிய வந்ததால், அவருக்கு வேறு இடத்தில் திருமணம் ஏற்பாடு செய்துள்ளனர்.

இதனால் வேதனையடைந்த காதல் ஜோடிகள்,  கடந்த 7ஆம் தேதி பாலக்கோடு அருகேயுள்ள முருகன் கோவிலில் ரகசியமாக திருமணம் செய்து கொண்டுள்ளனர். பின்னர், தாங்கள் முருகன் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டதாகவும், இருவரும் தற்கொலை செய்து கொள்ளப் போகிறோம் என்றும் கூறி பெற்றோருக்கு செல்போனில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பியுள்ளனர். தொடர்ந்து, கோவில் வளாகத்தில் எலி பேஸ்ட்டை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றனர். வாய்ஸ் மெசேஜை பார்த்து அதிர்ச்சியடைந்த இருவரது பெற்றோரும் கோவிலுக்கு சென்று பார்த்தபோது இருவரும் மயங்கி கிடந்தனர்.

இதனை அடுத்து, அவர்களை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சினேகா இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேல் சிகிச்சைக்காக தருமபுரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள தமிழரசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.