×

குமரி அருகே தனியார் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை!

 

கன்னியாகுமரி அருகே தனியார் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் மேலகிருஷ்ணன் புதூர் அருகேயுள்ள பள்ளம் பகுதியை சேர்ந்தவர் அலெக்ஸ். இவரது மனைவி ரூபின்மேரி  இவர் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர்களது 2-வது மகன் ரூபிக்சன் காஸ்ட்ரோ (22). இவர் அஞ்சுகிராமத்தில் உள்ள தனியார் கல்லூரியில் எம்பிஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில், ரூபிக்சன் காஸ்ட்ரோவால் சரியாக படிக்க முடியவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து தனது தாயாரிடம் கூறி கல்லூரிக்கு செல்லவில்லை என தெரிவித்துள்ளார். அவரை ரூபின் மேரி சமாதானம் செய்து படிப்பில் கவனம் செலுத்தும்படி தெரிவித்துள்ளார்.

எனினும் ரூபிக்சன் காஸ்ட்ரோ மனமுடைந்து காணப்பட்டு உள்ளார். இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை அலெக்ஸ் மற்றும் ரூபினா மேரி ஆகியோர் வேலைக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். பின்னர் பணிமுடிந்து மாலை ரூபினா மேரி வீட்டிற்கு வந்தபோது, ரூபிக்சன் காஸ்ட்ரோ தனது அறையில் இருந்து வெளியே வராமல் இருந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த அவர், ரூபிக்சன் காஸ்ட்ரோவின் அறைக்கு சென்று பார்த்துள்ளார்.

அப்போது, அவர் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் சடலமாக தொங்கினார். இதனால் அதிர்ச்சியடைந்த தம்பதியினர் கதறி அழுதனர். தகவல் அறிந்த சுசீந்திரம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து தந்தை அலெக்ஸ் புகாரின் பேரில் சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.