×

ஓசூரில் குட்கா புகையிலை பொருட்கள் கடத்திய நபர் கைது!

 

ஓசூரில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த நபரை கைதுசெய்த போலீசார், அவரிடம் இருந்து  ரூ.5 ஆயிரம் மதிப்பிலான குட்காவை பறிமுதல் செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பேருந்து நிலையம் பகுதியில் டவுன் காவல் நிலைய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு கையில் பையுடன் சந்தேகத்திற்கு உரிய விதமாக நின்ற நபரை போலீசார் பிடித்து சோதனையிட்டனர். அப்போது, அந்த பையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக அந்த நபரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அதில் அவர் காஞ்சிபுரம் மாவட்டம் பழைய பெருங்களத்துர் சீனிவாசநகரை சேர்ந்த சீனிவாசன்(48) என்பதும், அவர் கடைகளில் விற்பனை செய்வதற்காக குட்காவை கடத்திச் சென்றதும் தெரியவந்தது. இதனை அடுத்து, சீனிவாசனை கைதுசெய்த போலீசார், அவரிடம் இருந்து ரூ.5 ஆயிரம் மதிப்பிலான 11 கிலோ குட்கா புகையிலை  பொருட்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, கைதான சீனிவாசனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.