×

தக்கலையில் ஆட்டோவில் வைத்திருந்த ரூ.10 ஆயிரம் பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்!

 

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் ஆட்டோவில் வைத்திருந்த ரூ.10 ஆயிரம் பணத்தை திருடிச் சென்ற மர்மநபரை போலீசார் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியை சேர்ந்தவர் சூர்யா. ஆட்டோ ஓட்டுநர். சம்பவத்தன்று இவர் வங்கியில் இருந்து எடுத்த ரூ.10 ஆயிரம் பணத்தை, தனது ஆட்டோவில் வைத்துவிட்டு, அருகில் உள்ள கடைக்கு பொருட்கள் வாங்க சென்றுள்ளார். சிறிது நேரத்திற்கு பின் வந்து பார்த்தபோது ஆட்டோவில் இருந்த பணம் மாயமாகி உள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த சூர்யா, இதுகுறித்து தக்கலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

அப்போது, பேண்ட் சட்டை அணிந்த இளைஞர் ஒருவர் சூர்யாவை நோட்டமிடுவதும், அவர் வெளியே சென்றும் ஆட்டோவில் இருந்த பணத்தை திருடிக் கொண்டு தப்பிச் சென்றதும் தெரிய வந்தது. இதனை அடுத்து, சிசிடிவி காட்சி அடிப்படையில் பணத்தை திருடிச் சென்ற நபரை தக்கலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.