×

வீட்டில் நின்ற புல்லட்டை லாவகமாக திருடிய முகமூடி கொள்ளையன்... உளுந்தூர்பேட்டை அருகே பரபரப்பு!

 

உளுந்தூர்பேட்டை அருகே வீட்டில் நிறுத்தி வைத்திருந்த விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை முகமூடி அணிந்த மர்மநபர் ஒருவர் திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்துர்பேட்டை அருகே உள்ள செம்மேடு கிராமத்தை சேர்ந்தவர் வேலு. இவர் கடந்த புதன்கிழமை இரவு வீட்டின் முன்பு தனது விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு சென்றுள்ளார். மறுநாள் காலையில் சென்று பார்த்தபோது இருசக்கர வாகனம் மாயமாகி உள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த வேலு வீட்டில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தார். அப்போது, நள்ளிரவு 1.30 மணி அளவில் வேலுவின் வீட்டிற்கு முகமூடி அணிந்து வந்த மர்மநபர் ஒருவர், லாவகமாக இருசக்கர வாகனத்தின் சைடு லாக்கை உடைத்து, அதனை திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

இது குறித்து வேலு திருநாவலுர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற மர்மநபரை தேடி வருகின்றனர். இதனிடையே இந்த திருட்டு சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.