×

தன்னை கடித்த பாம்புடன் சிகிச்சைக்கு வந்த விவசாயி... நாமக்கல் அரசு மருத்துவமனையில் பரபரப்பு!

 

நாமக்கல் அருகே விவசாயி தன்னை கடித்த பாம்புடன் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலுர் அருகே உள்ள ஓலப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனி(65). விவசாயி. இவர் தனக்கு சொந்தமான தோட்டத்தில் சோளம் பயிரிட்டு உள்ளார். நேற்று அறுவடை செய்து வைத்திருந்த சோளத்தட்டு கட்டுக்களை பழனி எடுத்துக் கொண்டிருந்தபோது. அதில் மறைந்திருந்த கொடிய விஷமுடைய கட்டு விரியன் பாம்பு அவரை கடித்துள்ளது. இதனால் அதிர்ச்சிக்குள்ளான பழனி, உடனடியாக கம்பால் அந்த பாம்பை அடித்துக் கொன்றார்.

இதனை அடுத்து அருகில் இருந்தவர்கள் பழனி மற்றும் இறந்த கட்டுவிரியன் பாம்பையும் எடுத்துக் கொண்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். அங்கு மருத்துவர்கள் பழனிக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். கடித்த பாம்புடன் விவசாயி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த சம்பவம் மருத்துவமனை வளாகத்தில்  பரபரப்பை ஏற்படுத்தியது