×

தாய் இறந்த சோகத்தில் கட்டிட தொழிலாளி தற்கொலை... பெருந்துறை அருகே சோகம்!

 

ஈரோடு மாவட்டம் பெருந்துறை தாய் இறந்த சோகத்தில் கட்டிட தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகேயுள்ள அய்யகவுண்டம் பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (34). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி ஷகிலா. கடந்த ஆண்டு ஆனந்தகுமாரின் தாயார் உடல் நலக்குறைவு காரணமாக இறந்துவிட்டார். தாயின் மீது அதிக அன்பு வைத்திருந்த ஆனந்தகுமார் அவரது மறைவால் மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இதனால் அவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் ஆனந்தகுமார் தாயாரின் நினைவு நாள் வந்துள்ளது.

அன்றைய தினம் அவர் காலையில் திதி கொடுத்துவிட்டு, வேலைக்கு புறப்பட்டு சென்றுள்ளார். அன்று இரவு நீண்டநேரம் ஆகியும் அவர் வீட்டிற்கு வரவில்லை. இதனால் உறவினர்கள் அவரை தேடி வந்துள்ளனர். இந்த நிலையில், மறுநாள் அதிகாலையில் மதுபோதையில் வீட்டிற்கு ஆனந்த குமார் தான் விஷம் குடித்துவிட்டதாக மனைவி ஷகிலாவிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஷகிலா, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு  ஆனந்தகுமார் கொண்டுசெல்லப்பட்டார். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், ஆனந்த குமார் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ஆனந்தகுமாரின் மனைவி ஷகிலா புகாரின் பேரில் பெருந்துறை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.