×

அரியலூர் அருகே கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை!

 

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள கல்லக்குடி பகுதியை சேர்ந்தவர் ராமையன். இவரது மகன் முத்துகுமார்(20). இவர் தனியார் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில், கடந்த சில நாட்களாக முத்துகுமார் கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இதனால் பெற்றோர் அவரை கண்டித்து கல்லூரிக்கு செல்லும்படி அறிவுறுத்தி உள்ளனர். இதனால் மனமுடைந்த முத்துக்குமார், சம்பவத்தன்று வீட்டில் இருந்த பூச்சிமருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

மயங்கிய நிலையில் கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு  மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி முத்துகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தந்தை ராமையன் அளித்த புகாரின் அடிப்படையில் கீழப்பழுர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.