×

கன்னிவாடி அருகே அரசுப் பேருந்து மீது கார் மோதி விபத்து... குழந்தை உள்பட மூவர் பலி!

 

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே அரசுப் பேருந்து மீது கார் மோதிய விபத்தில் குழந்தை உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் அபிஜித்(47). இவர் தனது குடும்பத்தினருடன் காரில் திண்டுக்கல் மாவட்டம் பழனி நோக்கி சென்று கொண்டிருந்தார். காரை அபிஜித்தின் நண்பரான கண்ணன் என்பவர் ஓட்டிச்சென்றார். திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே பண்ணைப்பட்டி பகுதியில் சென்றபோது காரின் முன்பக்க டயர் திடீரென வெடித்தது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடிய அந்த கார், சாலை தடுப்பை கடந்து எதிர்புறம் உள்ள சாலைக்கு சென்றது. அப்போது, எதிரே பழனியில் இருந்து மதுரை நோக்கி சென்ற அரசுப் பேருந்தின் மீது அதிவேகமாக மோதி விபத்திற்கு உள்ளானது.

இதில் காரில் இருந்த 2 வயது குழந்தை மற்றும் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இடிபாடுகளில் சிக்கி 6 பேர் பலத்த காயமடைந்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கன்னிவாடி போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் மற்றும் ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை அடுத்து, விபத்தில் பலியானோர் எண்ணைக்கை 3 ஆக உயர்ந்தது. தொடர்ந்து, கன்னிவாடி போலீசார், 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.