×

திருப்பூர் அருகே பைக் மீது கார் மோதி விபத்து - இருவர் பலி!

 

திருப்பூர் மாவட்டம் அவிநாசிபாளையம் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர். 

திருப்பூர் மாவட்டம் அவிநாசிபாளையம் அருகே உள்ள கோவில்பாளையம் புதூர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி சின்ன ராமசாமி(65). இவரது தோட்டத்தில்  தொழிலாளி ஆக பணிபுரிபவர் மனோகரன்(60). நேற்று இருவரும் அவினாசிபாளையம் பகுதியில் உள்ள தோட்டத்திற்கு வேலைக்கு சென்றுவிட்டு, பின்னர் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர். அவினாசிபாளையம் பிரிவு அருகே சென்றபோது, சின்ன ராமசாமி இருசக்கர வாகனம் மீது எதிரே திருப்பூரில் இருந்து சிவகங்கை நோக்கி சென்ற கார் மோதி விபத்திற்குள்ளானது. இதில் தூக்கிவீசப்பட்டதில் பலத்த காயமடைந்த சின்ன ராமசாமி, மனோகரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அவிநாசிபாளையம் போலீசார், பலியான இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, கார் ஓட்டுநர் சிவகங்கை மாவட்டம் சிறுகூடல்பட்டியை சேர்ந்த அழகுவிடம் (45) விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் 2 விவசாயிகள் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.