×

நெல்லை அருகே பைக் மீது கார் மோதி விபத்து - தொழிலாளி பலி!

 

நெல்லை மாவட்டம் மானூர் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள பனவடலிசத்திரம் பகுதியை சேர்ந்தவர் பாக்கியசாமி (59). கூலி தொழிலாளி. இவர் நேற்று தனது மகன் மனோஜ் (28) உடன் நெல்லைக்கு இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தார். நெல்லை மாவட்டம் மானூர் அடுத்த சேதுராயன்புதூர் பகுதியில் சென்றபோது பாக்கியசாமி வாகனத்தின் மீது எதிரே வந்த கார் அதிவேகமாக மோதி விபத்திற்குள்ளானது. இதில் வாகனத்தில் இருந்து தூக்கிவீசப்பட்ட பாக்கியசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும், மனோஜ் பலத்த காயமடைந்தார். அவரை அருகில் இருந்த பொதுமக்கள் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்த பாக்கியசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கார் ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.