×

திம்பம் மலைப்பாதையில் திடீரென பற்றி எரிந்த கார் - போக்குவரத்து பாதிப்பு!

 

சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப்பாதையில் ஓடும் காரில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

தமிழகம் - கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோவிலை அடுத்து அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. இந்த மலைப்பாதை வழியாக இரு மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நேற்று மதியம் தாளவாடியில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி 4 பயணிகளுடன் கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. திம்பம் மலைப்பாதையில் 19-வது கொண்டை ஊசி வளைவு அருகே சென்றபோது காரின் முன்பகுதியில் திடீரென தீப்பற்றியது. சிறிது நேரத்திற்குள் மளமளவென கார் முழுவதும் தீ பரவியது.

இதனால் அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் உடனடியாக காரை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு, 4 பேரும் காரில் இருந்து இறங்கி தப்பியோடினர். இதனால் சாலையில் கார்  தீப்பற்றி எரிந்தது. இதனை கண்ட வாகன ஓட்டிகள் இதுகுறித்து ஆசனுர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க முயன்றனர். சுமார் அரை மணி நேரத்திற்குள்  தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த விபத்தில் கார் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. தீ விபத்து காரணமாக சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது