×

வெள்ளக்கோவில் அருகே சாலையின் குறுக்கே வந்த நாய் மீது பைக் மோதல் - இளைஞர் பலி!

 

திருப்பூர் அருகே சாலையின் குறுக்கே வந்த நாய் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் இந்திரா நகரில் வசித்து வருபவர் கார்த்திகேயன்(34). தொழிலாளி. இவர் நேற்று தனது இருசக்கர வாகனத்தில் வெள்ளக்கோவிலில் இருந்து கரூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, திடீரென சாலையின் குறுக்கே வந்த நாயின் மீது இருசக்கர வாகனம் மோதியது. இதில் வாகனத்தில் இருந்து நிலை தடுமாறி விழுந்த கார்த்திகேயன் பலத்த காயமடைந்தார். இதனை கண்டு அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்த வெள்ளகோவில் போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.