×

ஈரோடு அருகே கிணற்றில் தவறி விழுந்து 5 வயது சிறுவன் பலி!

 

ஈரோடு மாவட்டம் மலையம்பாளையம் அருகே விளையாடிய போது கிணற்றில் தவறி விழுந்து வடமாநில சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

ஓடிசா மாநிலம் கந்தமால் மாவட்டம் படகுடா பகுதியை சேர்ந்தவர் சோட்டுக்குமார். இவர் ஈரோடு மாவட்டம் மலையம்பாளையம் அருகே உள்ள கணபதிபாளையம் பகுதியில் உள்ள சிமெண்ட் கல் அடிக்கும் நிறுனத்தில் தங்கி பணிபுரிந்து வந்தார். அவருடன், அவரது மனைவி அனிதாடிகள் மற்றும் 5 வயது மகன் லதிக்குமார் (5) ஆகியோர் தங்கி இருந்தனர். இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று கணவன் - மனைவி இருவரும் நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது, சிறுவன் லத்திக்குமார் அருகில் விளையாடி கொண்டிருந்தான்.

சிறிது நேரத்திற்கு பின் பார்த்தபோது லதிக்குமார் மாயமாகினான். இதனால் அதிர்ச்சியடைந்த சோட்டுகுமார், அவனை பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது, அருகில் உள்ள தோட்டத்து கிணற்றில் சிறுவன் லதிக்குமார் மிதப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த சோட்டுகுமார்,  கிராமத்தினர் உதவியுடன் சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

அங்கு அவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் லதிக்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவலின் பேரில் மலையம் பாளையம் போலீசார், சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிணற்றில் தவறி விழுந்து 5 வயது சிறுவன் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.