×

அரூர் அருகே 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை... இளைஞர் போக்சோவில் கைது!

 

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள ஆண்டியூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி. அவரது 8 வயது மகள், அந்த பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் 3ஆம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று சிறுமி, தனது வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தார். அப்போது ஆண்டியூரை சேர்ந்த செல்லத்துரை(21) என்ற இளைஞர் சிறுமிக்கு பிஸ்கட் கொடுத்து, தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர், அங்கு வைத்து சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார்.

அப்போது, சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்தபோது, செல்லத்துரை அவருக்கு பாலியல் தொல்லை அளித்தது தெரியவந்தது. இதனை அடுத்து, சிறுமியை மீட்ட கிராமத்தினர், செல்லத்துரைக்கு தர்மஅடி கொடுத்து அருர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், செல்லத்துரையை கைது செய்தனர். தொடர்ந்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.