×

பென்னாகரம் அருகே கடமானை வேட்டையாடி சமைத்து சாப்பிட்ட 8 பேர் கைது... ரூ.2 லட்சம் அபராதம் விதிப்பு!

 

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே காப்புக்காட்டில் கடமானை வேட்டையாடி சமைத்து சாப்பிட்ட 2 பெண்கள் உள்பட 8 பேரை கைது செய்த வனத்துறையினர், அவர்களுக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வனச்சரகத்திற்கு உட்பட்ட நெருப்பூர் பதனவாடி காப்புக்காட்டில் சிலர் வனவிலங்குகளை வேட்டையாடுவதாக, மாவட்ட வன அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், பென்னாகரம் வனச்சரகர் முருகன் தலைமையில், வனவர் சக்திவேல், செல்வமுத்து, பழனிச்சாமி உள்ளிட்ட வனவர்கள் அடங்கிய குழு அந்த பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, ஏமனூர் சாலையில் கோரப்பள்ளம் என்ற இடத்தில் சிலர் கடமானை வேட்டையாடி கூட்டமாக சமைத்து சாப்பிட்டு கொண்டிருப்பது தெரிய வந்தது. இதனை அடுத்து, அங்கு சென்ற வனத்துறையினர் ஒட்டனூர் பண்ணவாடியை சேர்ந்த கோவிந்தராஜ்(35), முத்துசாமி(55), கண்ணையன்(55), மாதையன்(55), மற்றொரு முத்துச்சாமி(60), சின்னதுரை(40), பொன்னம்மாள்(60) மற்றும் சின்னபொண்ணு(50) ஆகிய 8 பேரை கைது செய்தனர்.

தொடர்ந்து, அவர்களிடம் இருந்து சமைத்த கடமான் இறைச்சி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தருமபுரி மாவட்ட வன அலுவலர் நாயுடு உத்தரவின் பேரில், கடமானை வேட்டையாடிய 2 பெண்கள் உள்பட 8 பேருக்கும் தலா 25 ஆயிரம் வீதம் ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.