×

அரக்கோணம் அருகே வீட்டின் கதவை உடைத்து 70 பவுன் நகை, 1 கிலோ வெள்ளிப்பொருட்கள் கொள்ளை!

 

அரக்கோணம் அருகே உணவக மேலாளர் வீட்டின் கதவை உடைத்து 70 பவுன் நகை, 1 கிலோ வெள்ளிப்பொருட்கள் மற்றும் 1 லட்சம் ரொக்கப்பணம் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள வாணியம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன். இவர் சென்னையில் உணவகம் ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பிரபாகரன் தனது குடும்பத்துடன் பெங்களுருவில் உள்ள மகன் வீட்டிற்கு சென்றுள்ளார். மறுநாள் காலையில் அவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்துள்ளது. இதனை கண்ட உறவினர்கள் பிரபாகரனுக்கு தகவல் அளித்தனர்.  இதனால் அதிர்ச்சியடைந்த, பிரபாகரன் விரைந்து வீட்டிற்கு வந்து பார்த்துள்ளார்.

அப்போது, மர்மநபர்கள் அவரது வீட்டின் பீரோவை உடைத்து உள்ளே இருந்த 70 பவுன் நகைகள், 1 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 1 லட்சம் ரொக்கப்பணம் ஆகியவற்றை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பிரபாகரன், அரக்கோணம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், இந்த கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.